எழுத்துத் தோன்றியது எந்தக் காலம்? கவிதை தோன்றியது எந்தக் காலம்? இரண்டுமே ஒருநேரத்தில் உருவாகியிருக்குமா? இதன் வரலாறு தெரிந்திருக்கத் தேவையில்லை எனினும் தற்காலத்தில் கவிதை என்று எழுதப்படும் ஆக்கங்களில் கவித்துவம் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறோம். மரபு, புதுக்கவிதை என்று இரண்டிலுமே இவ்வாறு கவித்துவம் இன்றி எழுதப்படுவதாய் நான் கருதுகிறேன்.
தற்போதெல்லாம் இணையத்தில் யாப்பிலக்கணம் கற்றுத்தர பலபெரிய கவிஞர்கள் உள்ளனர். கற்க முயற்சிக்கும் அனுபவத்தில் நான் எங்கோ வாசித்த குறிப்பின்படி, யாப்பிலக்கணம் கற்று வெண்பா,விருத்தம் எழுத முடியும். ஆனால் அவை கவிதைகளாய் அமைவது எழுதுபவரின் கவித்திறனைப் பொறுத்த்தது என்று சொல்லப்பட்டிருந்தது. எதுவாயினும் கற்க முனைதலும் கற்றவற்றை எழுதுவதுமாய் பலர் இணையத்தில் வலம்வரல் நல்லதொரு நிகழ்வு. இவ்வாறன பல புதியவர்களை மரத்தடியிலும் மரபுக்கவி கற்றலை மரபிலக்கியத்திலும் காணலாம்.
புதுக்கவிதை பற்றிப் பலருக்கு பலவிதமாய் கருத்துகள் இருக்கலாம். எனினும் எழுத முனையும் பலரில், சரியாக என்னவென்று வரையறுக்கத் தெரிந்தவர்கள் எத்தனைபேர் ? அமைப்புத் தெரியாமல் நல்ல கருத்துக்களைச் சொல்லும் கவிதைகள் பலவற்றை இன்று அதிகம் காணலாம். கருத்துச் சொல்வதை ஆழம் பொதியச் சொல்லாமல் வெறும் வசனமாகவோ சொற்கோவையாகவோ அமைய எழுதும் சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு எழுதப்படும் முயற்சிகள் இணையக்குழுமங்களில் சமர்பிக்கப்படும் போது விமர்சங்களால் படைப்புத்தன்மை சிறக்கவழி உண்டு.
மனதில் கவிதைபற்றி பல கேள்விகள் உண்டு. அவற்றிக்கு விடைகள் தேடும் முன்னர் இலக்கணம் முற்றுமுழுதாய்த் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. நான் எழுத முனையும்/முனைந்த எல்லா ஆக்கங்களிலும் பல ஒற்றுப் பிழைகள். எனது முதல் இடுகையில் உள்ள அலை தாண்டி அம்மனில் கூட பல பிழைகளை பேராசியர் அனந்த் அவர்கள் திருத்தித் தந்திருந்தார். நன்றி கூறும் இந்நேரதில் கவித பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

No comments:
Post a Comment